அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, வெற்றிமாறன் இயக்கிய தமிழ்ப்படமான விசாரணை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, விசாரணை, சாய்ரத், உட்தா பஞ்சாப் உள்பட பல படங்கள் இந்தியா சார்பில் தேர்வாகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
அவற்றில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை என்ற தமிழ்ப்படத்தை, கேதன் மேத்தா தலைமையிலான நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த வருடம், "கோர்ட்' என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டது.
தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘விசாரணை’. கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளளார்கள்.
72-வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது.