கரகாட்டக்காரன், சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் சண்முக சுந்தரம் காலமாகியுள்ளார்.
உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று அவர் காலமானார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர். அண்ணாமலை, செல்வி, அரசி, வம்சம் ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர்.
ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்த சண்முக சுந்தரம், பிறகு சிவாஜியின் உதவியால் ரத்த திலகம் படத்தில் நடிகராக அறிமுகமானார். பிறகு கர்ணன் படத்திலும் நடித்தார். தொடர்ந்து வாழையடி வாழை, இதயக்கனி, குறத்தி மகன், படிக்காத பண்ணையார் போன்ற படங்களிலும் நடித்தார்.
அவருடைய மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.