அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் - டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet Ek Prem Katha). தூய்மை இந்தியா திட்டத்துக்கான என்னுடைய சிறிய பங்களிப்பு என்று இப்படம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் அக்ஷய் குமார்.
தூய்மை இந்தியா என்கிற ஸ்வ்ச் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2019-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத சுகாதாரமான சமூகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேச மேம்பாட்டுக்கும், வீணாகும் குப்பைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
தூய்மை குறித்த கூடுதல் விழிப்புணர்வை அக்ஷர் குமாரின் படம் ஏற்படுத்துகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று படத்தின் டிரெய்லரைப் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இதனால் இந்தப் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது.
இப்படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயங்கியுள்ளார். பூமி பெட்னேகர், அனுபம் கெர் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் முதல் மூன்று நாள்களில் கிட்டத்தட்ட ரூ. 51 கோடி வசூலித்துள்ளது, டாய்லெட் ஏக் பிரேம் கதா. முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 13 கோடி வசூல் கிடைத்தது. அடுத்த இரு தினங்களில் ரூ. 17 கோடி, ரூ. 21 கோடி எனப் பெற்றது. வார இறுதி நாள்களில் அபாரமான வசூலைப் பெற்று ஹிட் என்கிற நிலையை அடைந்தது.
திங்கள் அன்று இந்தப் படம் ரூ. 12 கோடி வசூலைப் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதையடுத்து முதல் நான்கு நாள்களில் ரூ. 63.45 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை போல எப்படியும் ரூ. 20 கோடிவரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தச் சில நாள்களில் ரூ. 100 கோடி வசூலைத் தொடவிருக்கும் டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் இத்தகைய வசூலால் ஹிந்தித் திரையுலகில் மிகுந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.