2000-ல் உலக அழகிப் பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. அழகாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சமூக அக்கறை உடையவர். உலக அரங்குகளில் தனது கருத்துக்களை வெளிப்படையாகவும் தெளிவாகவும் பேசக் கூடியவர்.
யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிரியா சென்றிருந்த அவர், அங்குள்ள அகதிகளையும், அவர்களின் குழந்தைகளையும் சந்தித்தார். பரேலி நகரிலுள்ள ஆதரவற்றோர் காப்பகமான பிரேம் நிவாஸுக்கு தொடர்ந்து தேவையான ஆதரவை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பிரியாங்காவின் சமூக சேவைகளை பாராட்டும் விதமாக அவருக்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது. பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்க டிவி தொடர் 'குவாண்டிகோ சீசன் 3'-வில் நடித்து வருகிறார். தவிர இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். இந்த விருதை பிரியங்காவின் சார்பில் அவரது தாயார் மது சோப்ரா பெற்றுக் கொண்டார்.
இவ்விருது பிரியங்காவுக்கு கொடுத்திருப்பது குறித்து மது சோப்ரா கூறியதாவது. பிரியங்காவின் சார்பில் இந்த விருதை மிகப் பணிவுடன் பெற்றுக் கொண்டுள்ளேன். கருணையும், கணிவும் உள்ள பெண்ணை பெற்றதற்கு ஒரு தாயாக பெருமை கொள்கிறேன். குழந்தையாக இருந்தபோது பிரியங்கா அன்னை தெரசாவின் சமூக செயல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே இந்த பெருமைக்குரிய விருதை பெறுவதற்கு பிரியங்கா தகுதியானவர்தான்’ என்று கூறினார்.
பிரியங்கா ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடிகை என்கிற புதிய பிரிவில் தாதா சாகேப் பால்கே அகாடமி விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.