பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பாந்தமாகப் பொருந்தி இருந்ததாக ரசிகர்கள் நினைத்தனர். தென்னிந்திய நடிகைகளில் தனது உயரத்தால் மட்டுமல்ல நடிப்புத் திறமை மற்றும் முக பாவனைகளுக்காகவும் ரசிகர்களது மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராகக் கருதப்படுபவர் அனுஷ்கா ஷெட்டி. பெங்களூரில் பிறந்தவரான அனுஷ்காவின் முழுக்கவனமும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிப்பதாகவே இருக்கிறது. கன்னடப்படங்களில் நடிப்பீர்களா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு நல்ல கதையம்சமுள்ள படங்கள் எனில் தான் கன்னடத்திலும் நடிக்க விரும்புவதாக அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்ட அனுஷ்கா சமீபத்தில் ஒரு நேர்காணலில் தான் பிரபாஸுடன் நடிக்கும் போது தான் மிகவும் வசதியாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார். பாகுபலிக்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து மிர்ச்சி மற்றும் பில்லா திரைப்படங்களில் நடித்துள்ளனர். நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல உயரத்திலும் இருவருக்கும் சரியான பொருத்தம் இருப்பதாகக் கருதுவதால் ரசிகர்கள் விரும்பும் ஜோடியாகத் திகழ்கிறார்கள்.
இதைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் அனுஷ்கா; பிரபாஸுடன் வேலை செய்வது எனக்கு எளிதாக இருக்கிறது. அவர் சக நடிகர் மட்டுமல்ல எனது நல்ல நண்பரும் கூட என்பதால் இனி எப்போது பிரபாஸுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் நான் அதை தவறவிடப் போவதில்லை. எனத் தெரிவித்துள்ளார். பிரபாஸின் அடுத்த படமான சாஹூவில் அவருக்கான கதாநாயகி இன்னும் தேர்வாகவில்லை. பாலிவுட் நடிகைகள் யாராவது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை எனும் நிலையில் யாருக்குத் தெரியும்? ஒருவேளை அனுஷ்காவே மறுபடியும் பிரபாஸ் ஜோடியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.