அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பேட்மேன் படம் ஜனவரி 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்ஷய் குமார் நடித்த பேட் மேன் படமும் இதே சமயத்தில் வெளிவரவுள்ளது.
தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் உருவாகிவருகிறது. அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர். முதலில், இந்தப் படம் ஏப்ரல் 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அக்ஷய் குமார் தற்போது அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அக்ஷய் குமார் அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய படங்களை எதற்காக மோதலுக்கு உள்ளாக்குவேன்? பேட்மேன் அல்லது 2.0 இரண்டில் ஒன்றுதான் ஒரேசமயத்தில் வெளியாகும். ஜனவரி 25 அன்று 2.0 படம் வெளிவந்தால் பேட்மேன் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம். இல்லாவிட்டால் அதே நாளில் பேட்மேன் வெளியாகும். பேட்மேன் நான் தயாரித்த படம். 2.0 ரஜினி, ஷங்கர், லைகா நிறுவனம் ஆகியோரைச் சார்ந்தது என்று கூறினார்.
இந்நிலையில் பேட்மேன் படம் ஜனவரி 26 அன்று வெளியாவதால் 2.0 படத்தின் வெளியீடு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.