கிளாமராக நடிக்க மாட்டேன்! பிரியா பவானி ஷங்கர்

சிரீயல் டு சினிமா வந்த நடிகைகளில் சமீபத்திய வரவு பிரியா பவானி ஷங்கர். கல்யாணம் முதல் காதல் வரை
கிளாமராக நடிக்க மாட்டேன்! பிரியா பவானி ஷங்கர்
Updated on
2 min read

சிரீயல் டு சினிமா வந்த நடிகைகளில் சமீபத்திய வரவு பிரியா பவானி ஷங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்த பிரியா, மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவிலும் கவனம் பெற்றுள்ளார். மிகையில்லாத இயல்பான நடிப்பும், அழகான சிரிப்பும் இவரது ப்ளஸ் பாயிண்ட்.

மேயாத மான் பட வாய்ப்பினைத் தொடர்ந்து பிரியாவுக்கு படவாய்ப்புகள் நிறைய வருகிறதாம். ஆனால் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கவிருப்பதாக பிரியா பவானி ஷங்கர் 'சிட்டி எக்ஸ்ப்ரஸ்'  நாளிதழுக்கு தந்த பேட்டியில் கூறியுள்ளார்.

'மேயாத மான் படத்தில் நடித்ததற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. இப்படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டதற்கான காரணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இதனைத் தயாரிக்கிறார் என்ற காரணத்தினால் தான். நிச்சயம் கார்த்திக் நல்ல கதையாக இல்லாவிட்டால் தயாரிக்க முன் வந்திருக்க மாட்டார். மேலும் இந்தப் படத்தில் நடிப்பவர்களும் நல்ல தேர்வாக இருந்ததால் மேயாத மானை தவறவிடக் கூடாது என்று முடிவெடுத்தேன்’ என்றார்.

மேயாத மான் தீபாவளி அன்று வெளியானது திடீர் முடிவினால் தான். முதலில் மெர்சல் படம் வெளியாகவிருப்பதால் சற்றுத் தள்ளி இப்படத்தை வெளியிடலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் திடீரென்று தான் இந்த முடிவு மாற்றப்பட்டது. விஜய் படத்துக்குப் போட்டியாக நாங்கள் களம் இறங்கவில்லை, மெர்சல் வெளியான அன்று எங்கள் படமும் வெளியானது அவ்வளவே’ என்று கூறினார் பிரியா பவானி ஷங்கர்.

அதிக படங்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை. குறைந்த படங்களாக இருந்தாலும் நல்ல படங்களில் நடிக்கவே நினைக்கிறேன். அடுத்து நான் நடிக்கவிருக்கும் படம் மேயாத மானை விட முற்றிலும் வித்தியாசமானது. அப்படித்தான் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய ஒரே கண்டிஷன் பெண்களுக்கு மரியாதை தரும் கதாபாத்திரங்கள் உள்ள படத்தில் தான் ஒப்புக் கொள்வேன்.

எனக்கே தெரியும் நான் வழக்கமான ஒரு ஹீரோயின் இல்லையென்று. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை மட்டும் நான் ஏற்க விரும்புகிறேன், மேலும் க்ளாமராக நிச்சயம் நடிக்க மாட்டேன். எவ்வித சங்கடமும் இல்லாமல் என் குடும்பத்துடன் நான் நடிக்கும் படங்கள் இருக்க வேண்டும். அத்தகைய கண்ணியமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்’ என்றும் கூறினார்.

அடுத்து விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் மற்றொரு படத்திலும் நடிக்கவிருக்கிறாரா என்று கேட்டபோது, புன்னகை மாறாமல், இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமான செய்தி வரும் என்றார் பிரியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com