சென்னை: வெற்றி படமான 'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணி மேலும் ஒரு படத்தில் இணையவிருக்கிறது.
'டிமான்டி காலனி' திரைப்படத்தினை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்பொழுது நயன்தாரா, அதர்வா மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிப்பில் `இமைக்கா நொடிகள்' என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தினை இயக்கி வருகிறார்.. இப்படத்தினை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக பிரதான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில்தான் நயன்தாராவின் கணவராக சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடி ஏற்கனவே 'நானும் ரவுடி தான்' படத்தில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.