சென்னையில் 15-ஆவது சர்வதேச திரைப்பட விழா வரும் 14-இல் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். 2017-ஆம் ஆண்டுக்கான 15-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 14-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் சிறந்த தமிழ்த் திரைப் படங்களுடன் சர்வதேச மொழிப் படங்களும் திரையிடப்பட உள்ளன.
சென்னையில் சத்யம் திரையரங்கம், ரஷிய கலாசார மையம், தேவி, தேவிபாலா, கேசினோ போன்ற திரையரங்குகளில் திரைப்பட விழாக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இந்த திரைப்பட விழாவின் தொடக்க விழா வரும் 14-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. விழாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இரு எம்ஜிஆர் திரைப் படங்கள் திரையிடப்பட உள்ளன.