சென்னை: நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தான் நீக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் ராதாரவி தொடர்ந்த வழக்கில், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான 'பஞ்ச பாண்டவர் அணி' வெற்றி பெற்றது. நடிகர் சங்கத் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை அடுத்து 2016-ம் ஆண்டு நவம்பரில் நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராதாரவி உள்பட நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து நடிகர் ராதாரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்க ப்படும் வரை, ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்தது. இருந்த போதிலும் நடிகர் சங்கம் ராதா ரவி மீது எடுத்த நடவடிக்கை ரத்து செய்யப்படவில்லை.
இதன் காரணமாக நடிகர் விஷால் மீது ராதாரவி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், நடிகர் சங்கம் சார்பில் தொடர்ந்து கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் செவ்வாயன்று இந்த வழக்காணாது நீதிபதி எம்.எம்.சுந்தரேசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வருகிற 19-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்புமாறு, நீதிபதி சுந்தரேசன் உத்தரவிட்டார்.