திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்துக்கு காரணமானவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் வலியுறுத்தினார்.
விஷால் நடித்துவரும் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அம்பாசமுத்திரத்தில் திருநெல்வேலி மாவட்ட கேபிள் உரிமையாளர்களை சந்தித்து விஷால் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கேபிள் தொலைக்காட்சிகளில் புதிய படங்கள் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் புதிய படங்கள் கேபிளில் ஒளிபரப்பப்படுவதாக தயாரிப்பாளர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் உரிமையாளர்களை சந்தித்து கருத்து கேட்டுவருகிறேன்.
இனிவரும் காலங்களில் கேபிள் ஒளிபரப்பாளர்களுக்கும் புதிய படங்களின் பாடல் வெளியீடு, திரைப்பட முன்னோட்டம் உள்ளிட்டவற்றை வெளியிடும் உரிமையை குறைந்த கட்டணத்தில் வழங்குவது, தொலைக்காட்சி உரிமம் பெறாத சிறிய படங்களை குறிப்பிட்ட பகுதிகளில் திரையரங்கில் வெளியிடுவது, கேபிளில் ஒளிபரப்பு செய்ய விரும்புவோருக்கு தனியாக உரிமம் வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். புதிய படங்கள் அனுமதியின்றி கேபிள், இணையத்தில் ஒளிபரப்பப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கான காரணத்தை தெளிவாக எழுதிவைத்துள்ளார். அவரது மரணத்துக்கு காரணமான அன்புச்செழியனுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றார்.