திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது தயாரிப்பாளர் சி.வி.குமார் கந்துவட்டி தொடர்பாக சென்னை வளசரவாக்கத்திலுள்ள காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், அன்புச்செழியன் மீதான புகார் மனுவை திரும்பப் பெறுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சி.வி.குமார் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் இரு தினங்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர் இயக்குநரும் நடிகருமான சசிக்குமாரின் மைத்துனர்.
அசோக்குமார் தனது தற்கொலைக்கு, சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
வளசரவாக்கம் போலீஸார் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அன்புச்செழியன் தலைமறைவானார். இதையடுத்து அவரை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
விமானம் மூலம் அன்புச்செழியன் தமிழகத்தை விட்டு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மேற்கொண்டுள்ளனர்.