பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சென்னை தி.நகரில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த ராஜேந்திரன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 1) காலை 8 மணியளவில் காலமானார்.
அனுபவம் புதுமை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமனவர் சி.வி.ராஜேந்திரன். அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தது. சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை வைத்து கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அவரது சொந்த ஊர் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் ஆகும்.
சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி சிவகாமியின் செல்வன், கமல் நடித்த உல்லாச பறவைகள், ரஜினி நடித்த கர்ஜனை, விஜய், சிவாஜி,சிம்ரன் நடித்த ஒன்ஸ் மோர் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்து இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன். ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபது வரை ஹிந்தியில் பூர்ணசந்திரா என்ற பெயரில் இவர் இயக்கத்தில் வெளிவந்தது. சி.வி.ராஜேந்திரன் சிவாஜியை வைத்து 14 படங்களை இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜேந்திரனின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.