பாகுபலி திரைக்கதாசிரியர் கைவண்ணத்தில் உருவாகும் ஆர் எஸ் எஸ் சரித்திரத் திரைப்படம்!

2019 ஆம் ஆண்டில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அதைக் கணக்கிட்டே பாஜக மற்றும் ஆர் எஸ் எஸை மீண்டும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கவே பாஜக
பாகுபலி திரைக்கதாசிரியர் கைவண்ணத்தில் உருவாகும் ஆர் எஸ் எஸ் சரித்திரத் திரைப்படம்!
Updated on
1 min read

ஆர் எஸ் எஸ் வரலாறு... இந்தியாவில் ஆர் எஸ் எஸ்ஸின் துவக்கம் முதல் இன்று வரையிலான கதைக்களனைக் கொண்டு இந்தியில் திரைப்படம் ஒன்று உருவாகவிருக்கிறது. இதற்கான திரைக்கதையை எழுதவிருப்பது பாகுபலி 1&2, பஜ்ரங்கி பாயிஜான், மெர்சல் திரைப்படங்களின் திரைக்கதாசிரியரும் பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலியின் அப்பாவுமான விஜயேந்திர பிரசாத் என்கிறார்கள். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் துவக்க கால வரலாற்றை அறிய வேண்டி தற்போது விஜயேந்திர பிரசாத் வட இந்தியா முழுதும் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து ஆர் எஸ் எஸ் ஸ்தாபகர்கள் மற்றும் முக்கியமான பெருந்தலைவர்களான டாக்டர் கே பி ஹெக்வார், எம் எஸ் கோல்க்கர், வீர் சாவர்க்கர், கே சுதர்சன், மோகன் பகத் உள்ளிட்டோரைக் குறித்தெல்லாம் போதுமான விவரங்களைத் திரட்டத் தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள். 

இத்திரைப்படத்துக்கான பட்ஜெட் 100 கோடி என்கிறார்கள். படத்துக்கான நிதியுதவியை பாரதிய ஜனதா கட்சி அளிக்கவிருப்பதாகத் தகவல். இந்து வலதுசாரிக் இயக்கப்படமான ஆர் எஸ் எஸ் வரலாற்றை பாஜகவுடன் இணைந்து தயாரிக்கவிருப்பது கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவரும், லஹரி ரெகார்டிங் கம்பெனி அதிபரான G.துள்சிராம் நாயுடு மற்றும் அவரது சகோதரர் மனோகர் நாயுடு என்பதாகவும் ஒரு தகவல்.

இத்திரைப்படத்தில் பிரபல ஆர் எஸ் எஸ் தலைவர்கள் வேடத்தில் நடிக்க பாலிவுட்டின் முதல் வரிசை நடிகர்கள் சிலர் அணுகப்பட்டிருக்கிறார்கள். நடிகர் அக்‌ஷய் குமாரும் அதில் ஒருவர். முதலில் இந்தியில் தயாராகவிருக்கும் இத்திரைப்படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்யப்படவிருப்பதாகத் தகவல்.

அதற்காக தற்போது கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் தனிப்பட்ட முறையில் அனைத்து ஆர் எஸ் எஸ் தலைவர்களையும் பிரத்யேகமாகச் சந்தித்து ஆர் எஸ் எஸ் குறித்த வரலாற்று ஆவணங்களைத் திரட்டி வருகிறார். ஆர் எஸ் எஸ் தலைவரான மோகன் பகத்தை சந்திக்கப் போவதோடு ஆர் எஸ் எஸ் தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூருக்குச் சென்று பாஜக அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்கவிருக்கிறாராம்.

இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கமே துவங்கப்பட்ட காலத்தில் வெகு துரிதமாக மக்களிடையே நம்பிக்கை பெற்ற் இயக்கங்க்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஆர் எஸ் எஸ்ஸின் வெற்றிகள் மற்றும் தோல்விகளைப் பதிவு செய்வது தான் என்று கூறப்பட்டாலும், சிவ சேனையின் பால் தாக்கரே வாழ்க்கைச் சித்திரத்தை முறியடிப்பது தான் ஆர் எஸ் எஸ் வாழ்க்கைச் சித்திரப் படத்தின் மறைவான நோக்கமென்றும் விஷயமறிந்தவர்கள் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ 2019 ஆம் ஆண்டில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அதைக் கணக்கிட்டே பாஜக மற்றும் ஆர் எஸ் எஸை மீண்டும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்க்கவே பாஜக இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com