இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.
இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.
ஸ்ரீதேவியின் மரணத்துக்கு அவருடைய அழகுக்காக செய்துகொண்ட அறுவைசிகிச்சையும் ஒரு காரணம் என சமூகவலைத்தளங்களில் ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பாலாஜி டெலிபிலிம்ஸின் இணை நிர்வாக இயக்குநரும் பிரபல தயாரிப்பாளருமான ஏக்தா கபூர் ட்விட்டரில் இதுகுறித்து கூறியதாவது:
புரளிகளைப் பரப்புபவர்களே, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இதய நோய் இல்லாமல் அல்லது எவ்வித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளாமல் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேருக்கு இதயச் செயலிழப்பு (cardiac arrest) ஏற்படலாம். இத்தகவலை என் மருத்துவர் தெரிவித்தார். இது விதியே அன்றி, புரளி கிளப்புவர்கள் போல மரணம் உண்டாகவில்லை என்று ட்வீட் செய்தவர், சில நேரங்களில் வலிமையான பெண்களுக்குப் பலவீனமான இதயங்களும் உண்டு என்றும் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.