முன்னாள் விஸ்வ இந்து பரிக்ஷித் தலைவர் பிரவீண் தகாடியாவின் 'இந்து ஹி ஆகா’ அமைப்பின் ஆக்ரா நகரத் தலைவர் கோவிந்த் பராஷர் தனது ஆதரவாளர்களுடன் அண்மையில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'லவ்ராத்ரி' என்ற படத்தின் போஸ்டர்களை எரித்தார்.
செய்தியாளர்களிடம் இது குறித்து அவர் கூறியது, ‘இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துமாறு சல்மான் கான் நடித்துள்ள லவ்ராத்ரி அமைந்துள்ளது. இந்துப் பண்டிகையான நவராத்ரியின் பெயரை கேவலப்படுத்தும் வகையில் இப்படத்தின் படத்தின் தலைப்பு அமைந்திருப்பதுடன், நவராத்திரி பண்டிகை தினங்களான அக்டோபர் மாதத்தில் அதனை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. இந்தப் படம் ரிலீஸ் ஆகாமல் தடுக்க என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன் என்று கூறியதுடன், இந்துக்கள் மனத்தை புண்படுத்தும் விதத்தில் படம் தயாரித்த சல்மான் கானை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து உதைப்போர்க்கு இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் மனத்தை புண்படுத்தும் விதத்தில் இருக்கும் அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும், மீறி திரையிடப்பட்டால் திரை அரங்குகளுக்கு தீ வைத்து கொளுத்துவோம் என்றும் அந்த அமைப்பின் தொண்டர்கள் கூறிவருகிறார்கள்.
'இந்து ஹி ஆகா’ அமைப்பின் ஆக்ரா நகரத் தலைவர் கோவிந்த் பராஷரின் அறிவிப்பு சல்மான் கான் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.