'அந்த நடிகரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டேனா?' தன் மீது எழுந்த புகாருக்கு நடிகை சாய் பல்லவி பதிலடி!

சாய் பல்லவி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது அவரது முதல் படமான ப்ரேம்தான்.
'அந்த நடிகரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டேனா?' தன் மீது எழுந்த புகாருக்கு நடிகை சாய் பல்லவி பதிலடி!

சாய் பல்லவி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது அவரது முதல் படமான ப்ரேம்தான். அந்தளவுக்கு அப்படத்தில் மிக அழகாகப் பொருந்தி இருப்பார் அவர். அதன் பின் 'களி’ உள்ளிட்ட சில மலையாளப் படங்களில் நடித்த சாய் பல்லவியை டோலிவுட்டும் கோலிவுட்டும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

அண்மையில் நாணியுடன் நடித்த எம்சிஏ (மிடில் க்ளாஸ் அப்பாயி) என்ற படம் ஹிட்டாகி, அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது தமிழில் இயக்குநர் விஜயின் 'கரு’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சாய் பல்லவி. இது தவிர கணம் என்ற தமிழ் மற்றும் தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு ஹீரோ நாக செளரியா நடிக்கிறார்.

'படப்பிடிப்பின் போது சின்ன விஷயங்களுக்குக் கூட சாய் பல்லவி அடிக்கடி கோபப்படுபவராக இருந்தார், மரியாதை தரத் தெரியாதவராகவும் இருந்தார். மிகவும் எரிச்சலுடனேதான் படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்’ என்று அண்மையில் ஒரு பேட்டியில் நாக செளரியா சாய் பல்லவியைத் தாக்கிப் பேசியிருந்தார். இதற்கு உடனடியாக எந்த பதிலையும் சொல்லாத சாய் பல்லவி தற்போது இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்த சர்ச்சையின் போது இயக்குநர் விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரிடம் சாய் பல்லவி தன்னைப் பற்றி ஏதேனும் புகார் உள்ளதா, தான் மரியாதை குறைவாக எப்போதாவது நடந்ததுண்டா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அப்படி எதுவும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்கள்.

இதனைக் குறிப்பிட்டு சாய் பல்லவி, 'நடிகர் நாக சவுரியாவுடன் நான் என்ன பிரச்னை செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவரிடம் மரியாதை குறைவாக நான் நடந்து கொள்ளவில்லை. அவர் இப்போது வெளிப்படையாகப் பேசியது நல்லதுதான். அவரது உணர்வுக்கு நான் மதிப்பு தருகிறேன். என் மீது என்ன தவறு என்று தெரிந்தால் அதை திருத்திக் கொள்வேன். நாக சவுரியாவின் இந்த குற்றச்சாட்டு என் மனத்தை காயப்படுத்தியது உண்மைதான். ஆனால் அவரது வெளிப்படையான பேச்சினால் இதை நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். ஆனால் அவர்  இது பற்றி அப்போதே பேசியிருக்கலாம். இயக்குநரிடமாவது சொல்லியிருக்கலாம். வேலை செய்யும் இடத்தில் இதுபோன்ற விஷயத்தை மனத்தில் சுமந்து கொண்டிருப்பது வேலை சூழலைப் பாதிக்கும். ஒருவரை நான் காயப்படுத்திவிட்டேன் என்பது என்னை சங்கடப்படுத்தி விட்டது. அதைவிட நான் காயப்பட்டது ஏனென்றால் அதுபற்றி எனக்கு தெரியாமலேயே இருந்து விட்டதுதான். நாக சவுரியா நல்ல நடிகர். அவரைத் தெரிந்தோ தெரியாமலோ காயப்படுத்தியிருந்தால் நிச்சயம் அதற்கு வருந்துகிறேன். இனிமேல் அவர் என்னைப் பற்றி இவ்வாறு நினைக்க மாட்டார் என்று நம்புகிறேன்’ என்று சாய் பல்லவி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com