சயின்ஸ் திரில்லர் வகையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காளி' எனும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக அவரது மனைவி ஃபாத்திமா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
இப்படத்தில் பாடலசாரியிரகாப் பணியாற்றியுள்ள அருண்பாரதி கூறுகையில்,
விஜய் ஆன்டணி இசையில் எப்பொழுது பாடல் எழுதினாலும், என் பேனா துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடும். மக்களின் ரசனையையும், மாறி வரும் தமிழ் சினிமாவின் சூழலையும் அவர் நன்கு உணர்ந்தவர். அதேபோல், ஆளுமையான தமிழ் சினிமா இயக்குநர்களில், கிருத்திகா உதயநிதி அவர்களும் ஒருவர். இருவரின் ரசனைக்கும் உட்பட்டு, கதைக்கு என்ன தேவையோ, அதை மிகச் சரியாக அந்தப் பாடலில் எழுதியிருக்கிறேன். திரைப்படம் பார்க்கும் பொழுது அதை உணர்வீர்கள்.
“இதயத்தின் மையப் பகுதியில் இருக்கை விரித்து அமர்ந்தாய் ; உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும் ஒருத்தி வடிவில் கொடுத்தாய்... என்ற வரிகளை இயக்குநர் கிருத்திகா உதயநிதி மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகிய இருவரும் பாராட்டினார்கள். இந்தப் பாடலை விட, இதில் அம்மாவைப் பற்றிய பாடல் ஒன்றையும் நான் எழுதியிருக்கிறேன்.
ஒவ்வொரு முறை அம்மா பாடல் எழுதினாலும், அது புதிதாக ஏதோ ஒன்றைத் தந்து விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில், காலம் காலமாக கொண்டாடப்பட்டு வரும் அம்மா பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என்றார்.
மேலும் சண்டக்கோழி-2, களவாணி-2, எட்டு, மரகதக்காடு, என பல்வேறு திரைப்படங்களுக்கு பாடலாசிரியர் அருண்பாரதி பாடல்கள் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.