இந்த ஜோடி புதுசு! நடிகர் விக்ரம் மகனுக்கு கெளதமி மகள் சுப்புலட்சுமி ஜோடியாகிறார்!
டோலிவுட்டில் சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டியை, இயக்குநர் பாலா, 'வர்மா' என்ற பெயரில் பரபரப்பாக ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஏற்று நடித்த பாத்திரத்திற்கு விக்ரம் மகன் துருவை அறிமுகப்படுத்துகிறார் பாலா. இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் வர்மாவுக்கும் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 'குக்கூ’, ஜோக்கர்’ படப்புகழ் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். அண்மையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நேபாளம் அருகே காட்மாண்டுவில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கன்யாகுமரியில் விரைவில் தொடங்கவிருக்கிறது.
இந்நிலையில் கதாநாயகித் தேர்வு இன்னும் முடியாத நிலையில், அர்ஜுன் ரெட்டியில் நடித்த ஷாலினி பாண்டேவையே தமிழிலும் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்தார் பாலா. ஆனால் புதுமுகமாக இருந்தால்தான் இக்கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றபடியால் முதலில் கதாநாயகி இல்லாத காட்சிகளை படமெடுத்து முடித்தார். இன்னொரு பக்கம் ஹீரோயின் தேர்வை நடத்திக் கொண்டிருந்த போது, நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமி அப்பாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கும் என்று முடிவு செய்து கெளதமியிடம் கேட்டுள்ளார் பாலா. கெளதமி ஒப்புதல் அளித்த பின்னர், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்கின்றனர் படக்குழுவினர்.
அண்மையில் நாச்சியார் படத்தில் பாலா அறிமுகப்படுத்திய இவானா கவனம் பெற்ற நிலையில், மகள் சுப்புலட்சுமையை நடிக்க வைக்க கெளதமி முடிவு செய்தால், பாலா படம் சிறந்த அறிமுகமாக அமையும் என்கிறது கோலிவுட் தரப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.