சந்தோஷ் ஷெட்டி ஐடியில் வேலை செய்து கொண்டிருந்த போது அதிலிருந்து விலகி, தன் மனத்துக்குப் பிடித்த திரை துறையைத் தேர்ந்தெடுத்து முதல் படமாக கனசு கண்ணு தேரேடாடா’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது. ரசிகர்களின் பாராட்டுதல்களும் சாண்டல்வுட்டின் கவனமும் அவருக்குக் கிடைத்தது.
தனது இரண்டாவது படத்திற்காக இயக்குநர் சந்தோஷ் ஷெட்டி நண்பர்களுடன் லொகேஷன் பார்க்கச் சென்ற இடத்தில் நேற்று (30 மே) காலை 8.30 மணியளவில் எராமி நீர் வீழ்ச்சிக்கு அருகே நீர் வீழ்ச்சியிலிருந்து விழுந்து உயிர் இழந்தார்.
அப்பகுதியில் கடும் மழை மற்றும் எச்சரிக்கை நிலவி வருவதால் பொதுமக்கள் ஆழமான பகுதிகளுக்குச் செல்ல தடை இருந்தது. ஆனால் இதைக் கண்டு கொள்ளாமல் சந்தோஷ், போட்டோ ஷூட் நடத்தச் சென்றபோது, நீர் வீழ்ச்சியின் மேலுள்ள பாறையில் ஏறியுள்ளார். அதில் கால் வைக்கும் போது அது வழுக்கி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டார். அவருடன் சென்ற நான்கு நண்பர்கள் பதற்றம் அடைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மழையும் சுழல் வேகமும் அதிகமாக இருந்ததால், சந்தோஷ் பரிதாபமாக உயிர் இழந்தார்.
அவரது மரணம் குறித்து கர்நாடக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் செய்தியை அறிந்த கன்னட திரையுலகினர் சோகத்தில் மூழ்கினர்.
காடு, மலை, அருவி என இயற்கையை நேசிப்பவராக வாழ்ந்த சந்தோஷ், அண்மையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம், அவர் உலகை விட்டுச் செல்ல முன் தயாரிப்புப் போலவே இருந்திருக்கிறது.