கடைசி முத்தத்துடன் பேக் அப் ஆனது ஆதித்யா வர்மா டீம்!

விக்ரமின் மகன் ரசிகர்களின் மனதை ஈர்ப்பாரா என்பது ஆதித்யா வர்மாவின் வெற்றியில்தான் உள்ளது.
கடைசி முத்தத்துடன் பேக் அப் ஆனது ஆதித்யா வர்மா டீம்!


தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடித்தார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதினார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்தார்.

இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. படத்தின் இறுதி வடிவம் குறித்து பாலா - தயாரிப்பாளர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த நிலை உருவானது. இயக்குநர் உள்ளிட்ட புதிய படக்குழுவினரும் கதாநாயகியும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக வர்மா என்கிற தலைப்பு மாற்றப்பட்டு ஆதித்யா வர்மா என படத்தின் பெயர் மாறியது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகி கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாக நடித்தார். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவாளராகப் பங்களிக்க, ரதன் இப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். ஈ4 என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ப்ரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான 'ஆதித்யா வர்மா' படத்தின் ட்ரெய்லர் அர்ஜூன் ரெட்டி, மற்றும் கபீர் சிங் இரண்டு படங்களை மிஞ்சும் வகையில் இருந்தது. துருவ் விக்ரமின் நடிப்பு அசத்தும் வகையில் இருந்தது என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் ஆதித்யா வர்மாவின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டது. தற்போது படப்பிடிப்பின் கடைசி தினத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் வெளியாகியுள்ளது. 

படப்பிடிப்பின் கடைசி நாளில் துருவின் தந்தையும் நடிகருமான விக்ரம் கலந்துக் கொண்டார். இந்தக் காணொளியை துருவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில், கதாநாயகிக்கு முத்தம் கொடுத்து துருவ் விக்ரம் நடந்து செல்வது போன்ற காட்சி உள்ளது. இது குறித்து படத்துடன் துருவ் எழுதிய குறிப்பு, 'எனக்கு நடந்த மிக அழகான விஷயமாக ஆதித்யா வர்மா எப்போதுமே இருக்கும். ஆதித்யா வர்மாதான் எனக்கு ஒரு கை கொடுத்தார், என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்தார், எனக்கும் புரிதலை ஏற்படுத்தினார். இந்த  விடியோவில் உள்ள அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கடைசி சீனில் உள்ள அந்த மனிதருக்கு நிறைய நிறைய அன்பு. நீங்கள் இல்லாமல் இதை நான் நிச்சயம் செய்திருக்க முடியாது’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் துருவ். விடியோவில் கடைசியாகத் தோன்றுவது விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மகன் ரசிகர்களின் மனதை ஈர்ப்பாரா என்பது ஆதித்யா வர்மாவின் வெற்றியில்தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com