பண மோசடி தொடர்பாக பிக் பாஸ் இல்லத்தில் வைத்து நடிகை மீரா மிதுனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகையுமான மீரா மிதுனிடம் சென்னை எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் பிக் பாஸ் இல்லத்தில் இன்று விசாரணை நடத்தினார்கள். இதற்காகக் காவலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பிக் பாஸ் இல்லம் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.பி ஸ்டூடியோவுக்குச் சென்றார்கள். மிஸ் தமிழ்நாடு 2019 என்கிற நிகழ்ச்சி நடத்தப்போவதாகப் பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக மீரா மிதுன் மீது புகார் உள்ள நிலையில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.