தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கடந்த 15 வருடங்களாக நடித்து புகழ்பெற்ற நடிகையாக உள்ளார் தமன்னா(Tamannaah). இந்நிலையில் மும்பையின் வெர்சேவோ-வில் உள்ள கடற்புரப்பகுதியில் சந்தை விலையை விடவும் இரு மடங்கு அதிக விலைக்கு அவர் ஃபிளாட் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sameer Bhojwani என்கிற கட்டட நிறுவன உரிமையாளரிடமிருந்து அந்த ஃபிளாட்டை தமன்னா வாங்கியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்டது. 2055 சதுர அடி உள்ள ஃபிளாட்டுக்கு ரூ. 16.6 கோடி தந்துள்ளார் தமன்னா. மேலும் ஃபிளாட்டைப் பதிவு செய்ய முத்திரைக் கட்டணமாக ரூ. 99.60 லட்சம் செலுத்தியுள்ளார்.
அதாவது, ஒரு சதுர அடிக்கு ரூ. 80,778 வழங்கியுள்ளார். இந்த விலை அப்பகுதியின் தற்போதைய நிலவரத்துக்கு மிக அதிகம். இரு மடங்கு விலை. அவர் வாங்கிய ஃபிளாட்டுக்கு அருகே கட்டப்படும் வீடுகளின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ. 40,000 வரையில் தான் விற்கப்பட்டு வருகிறது.
பிறகு ஏன் இரு மடங்கு விலைக்கு அந்த ஃபிளாட்டை தமன்னா வாங்க வேண்டும்?
வீட்டின் நான்குப் பக்கத்திலிருந்தும் பார்த்தால் கடல் தெரியும்படி ஃபிளாட் அமைந்துள்ளது. இந்த ஒரு காரணத்துக்காகவும் வெர்சேவோ பகுதியின் முக்கியத்துவம் கருதியும் கூடுதல் விலைக்கு ஃபிளாட் வாங்க முடிவெடுத்துள்ளார் தமன்னா.
பே வியூ என்று பெயரிடப்பட்டுள்ள 22 மாடி அபார்ட்மெண்டில் தமன்னாவின் ஃபிளாட், 14-வது மாடியில் உள்ளது. கட்டடப் பணிகள் முடிவடைந்த பிறகு புதிய ஃபிளாட்டுக்கு விரைவில் குடிபுகவுள்ளார் தமன்னா. அந்த வீட்டின் இண்டீரியர் டெகரேஷன் பணிகளுக்கு எப்படியும் ரூ. 2 கோடி ஆகும் என்று அறியப்படுகிறது.