விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் 2002-ம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் பாலிவுட், ஹாலிவுட் என அவரது ஜெட் வேகப் பயணமும் வெற்றியும் உலகறிந்தது.
கடந்த ஆண்டு தன்னை விட பத்தாண்டு இளையவரான நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் புரிந்தார் பிரியங்கா சோப்ரா. சுவிட்ஸர்லாந்தில் தேனிலவு முடிந்து இந்தத் தம்பதியர் அவரவர் துறையில் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். திடீரென திருமணம் முடிந்த 117 நாட்களில் பிரியங்கா நிக்கை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி வைரலானது. ஆனால் அது பொய்யான தகவல் என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு பிரியங்காவிடம் பலரும் கேட்ட கேள்வி எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பதுதான். அண்மையில் ஒரு நேர்காணலில், பிரியங்காவிடம் இக்கேள்வியை கேட்டனர், அதற்கு அவர், 'குழந்தை பெற்றுக் கொள்ள எனக்கும் ஆசைதான். அது நிச்சயம் நடக்கும். ஆனால் அது கடவுள் நினைக்கும் போது மட்டும்தான்’ என்று பதிலளித்தார்.
கடந்த வருடம் திருமணம் முடிந்து புதிதாக குடும்பத்தைத் தொடங்குவதைப் பற்றி பிரியங்காவிடம் கேட்கப்பட்ட போது, 'என் தோழிகள் ஏற்கனவே குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். நீயும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள் என்பதுதான் அவர்கள் எனக்கு கூறிய அறிவுரை’ என்றார்.
பிரியங்காவின் கணவர், அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் நிக் ஜோனாஸ் கூறுகையில், 'சில சமயங்களில் குழந்தை வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். அது உண்மையிலேயே எனக்கு பெரிய கனவுதான். நிச்சயம் அந்த அழகான கனவு விரைவில் நிறைவேற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதை நீங்கள் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம், இந்த இளைய வயதிலேயே உனக்கு இதெல்லாம் தேவைதானா என்று பலர் சொல்லக் கூடும். ஆனாலும் இந்த வயதுக்குள்ளாக என் வாழ்வில் நான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் ஏராளம். அந்த அனுபவங்களை எனது வாரிசுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ளவே விரும்புவேன்’ என்றார்.
பிரியங்கா சோப்ரா திருமணம் முடிந்ததும் குழந்தை, குடும்பம் என செட்டில் ஆகிவிடுவார் என்று நிக் ஜோனஸின் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் அது இன்னும் நிறைவேறாத நிலையில் அவர் விரைவில் குழந்தை பெற்றுக் கொண்டு திருமண வாழ்க்கையில், தன்னை முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும் என்று நிக் ஜோனாஸின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.