சுஜித்தின் பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் கோரிக்கை!

நடிகர் ராகவா லாரன்ஸ், சுஜித்தின் பெற்றோருக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவில் அவர் கூறியதாவது...
சுஜித்தின் பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் கோரிக்கை!
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித், 80 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தான். மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். 27 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்க மேற்கொண்ட முயற்சிகள், ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தின் அளவு குறுகியதாக இருந்ததால் தோல்வியடைந்தன. சனிக்கிழமை அதிகாலை  70 அடி ஆழத்துக்கும் கீழே குழந்தை சுஜித் சென்றுவிட்டான். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் சுஜித் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு சுஜித்தின் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

நடிகர் ராகவா லாரன்ஸ், சுஜித்தின் பெற்றோருக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவில் அவர் கூறியதாவது:

குழந்தை சுஜித்தின் மரணத்தால் இன்று அக்டோபர் 29, எனது பிறந்தநாளைக் கொண்டாட மனம் வரவில்லை. ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கிவிட்டுச் சென்றுவிட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது... சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்தப் பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com