
இந்தியாவில் இன்று அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் வெளியான நிலையில் அருமையான கோடை விடுமுறைத் தருணத்தைத் தவறவிட்டுள்ளது கோலிவுட்.
இன்று இரு தமிழ்ப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. அழகரும் ரெண்டு அல்லக்கையும், முடிவில்லா புன்னகை. இரண்டிலுமே பெரிய நடிகர்கள் யாரும் நடிக்காததால் பெரிய கவனத்தையும் வசூலையும் பெறப்போவதில்லை.
அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் காலை 4 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. மே 1 அன்று விடுமுறை தினம் என்பதால் அதுவரை முழுமையான வசூலை இந்தப் படம் பெறவுள்ளது. ஆனால் இந்த நல்ல தருணத்தைத் தமிழ்த் திரையுலகம் தவறவிட்டு விட்டது.
2017-ம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று வெளியாகி வசூலில் சாதனை செய்தது பாகுபலி 2. மே 1-க்கு முன்பு வருகிற ஏப்ரல் மாதத்தின் கடைசி வார வெள்ளிக்கிழமை அந்தளவுக்கு முக்கியமான நாள். அப்போது வெளியாகும் படங்களுக்கு மே 1 வரை வசூல் நன்றாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனால் இதை உணர்ந்து சரியாகத் திட்டமிடவில்லை தமிழ்த் தயாரிப்பாளர்கள்.
மே 1 அன்று வெளியாகவிருந்த சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் மே 17-ம் தேதி வெளிவரவுள்ளது. விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படமும் அதே தேதியில் வெளிவரத் திட்டமிட்டுள்ளது. மே 31 அன்று சூர்யாவின் என்ஜிகே, விக்ரமின் கடாரம் கொண்டான் ஆகிய இரு படங்களும் வெளிவரவுள்ளன. இதனால் இந்த வாரம் பெரிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம் ஆகிய இரு படங்களுக்கும் மே 17 வரை பெரிய போட்டியில்லை. அதுவரை இவ்விரு படங்களும் வசூலில் திளைக்கலாம்.