தூங்கிப் போனதால் 9/11 தாக்குதலில் இருந்து தப்பித்த மைக்கேல் ஜாக்சன்: வெளிவந்துள்ள புதிய தகவல்!

இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த தினத்தன்று இரட்டைக் கோபுரத்தின் ஒரு தளத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது...
தூங்கிப் போனதால் 9/11 தாக்குதலில் இருந்து தப்பித்த மைக்கேல் ஜாக்சன்: வெளிவந்துள்ள புதிய தகவல்!

அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளானது. அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி இரட்டைக் கோபுர கட்டடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தார்கள். இதுதவிர, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் மீது மற்றொரு விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மொத்தமாக 3,000 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாட்டிக்கொள்ளாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவருடைய சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன் You Are Not Alone: Michael: Through a Brother's Eyes என்றொரு சுயசரிதை நூலில் இதுகுறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். 

இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த தினத்தன்று இரட்டைக் கோபுரத்தின் ஒரு தளத்தில் மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் தன் தாயிடம் தொலைப்பேசியில் பேசிய மைக்கேல் ஜாக்சன் அப்படியே தூங்கிப் போயிருக்கிறார். இதனால் அவரால் அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாமல் போனது. 

இதன்பிறகு மைக்கேல் ஜாக்சனின் தாய் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார். நல்லவேளையாக நீங்கள் என்னிடம் நீண்ட நேரம் பேசினீர்கள். அதனால் என்னால் அங்குச் செல்லமுடியாமல் போனது. நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் 9/11 சம்பவம் நடந்த  அடுத்த 8 வருடங்கள் கழித்து மைக்கேல் ஜாக்சன் இறந்துபோனார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com