சென்னை: அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு; அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை என்று நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னால் அஜித் ரசிகர்கள் 5000 பேர் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாகவும், அவர்கள் அஜித் ரசிகர்கள் என்ற தரப்பில் இருந்து பாஜகவுக்கு ஆதரவு தருவதாகவும் செய்திகள் வெளியாகின.
அத்துடன் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் நல்ல கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு; அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை என்று நடிகர் அஜித்குமார் திங்கள் மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித்தின் மக்களை தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பெயரில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியாகியுள்ள அறிக்கையின் முக்கிய விஷயங்களாவன பின்வருமாறு:
நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது எனது திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து வீடாக கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன்.
என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே.
எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை.
நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ வாக்களியுங்கள் என்றோ எப்போதும் நிர்ப்பந்தித்தது இல்லை; நிர்பந்திக்கவும் மாட்டேன்.
நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்ககளை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.