ஒருமுறை, கிரேஸி மோகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் நகைச்சுவை வசனங்களை எப்படி எழுதுகிறார் என்று கொஞ்சம் விளக்கினார்.
அதாவது, காட்சிக்கு உகந்த நகைச்சுவையான வரி என்பது நிச்சயம் எங்கேயோ இருக்கும். அதைத் தேடிக்கண்டுபிடிப்பதில் தான் சவால் உள்ளது. யோசிக்க யோசிக்கத்தான் சிறந்த பதில் கிடைக்கும் என்றார்.
ஹோட்டலில், நமக்கு வழங்கப்பட்ட காபியில் ஈ மிதக்கிறது. இதைப் பற்றி சர்வரிடம் முறையிடும்போது அவர் என்ன பதில் சொல்வார்? இதற்கு நூறு பதில்களைச் சொல்லமுடியும். ஆனால், யோசிக்க யோசிக்கதான் நாம் தேடுகிற நகைச்சுவையான பதில் கிடைக்கும் என்றார். இதற்கு ஓர் உதாரணமும் சொன்னார்.
மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தில் ஒரு முக்கியமான கட்டம். சலூனில் வேலை பார்க்கும் மாது, மாறுவேஷத்தில் இருப்பார். மாதுவைச் சந்திக்கும் ஒரு பெண்ணுக்கு அவர்மீது சந்தேகம் ஏற்படும். உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று மாதுவையே உற்றுப் பார்ப்பார். குட்டு உடையும் நேரமிது. சமாளிக்கவேண்டும். சட்டென்று சொல்கிற பதிலில் அந்தப் பெண்ணின் சந்தேகம் முழுவதுமாகக் களையவேண்டும். மாதுவின் பதிலை நீண்ட நேரம் யோசித்து இப்படி எழுதினேன் என்றார் கிரேஸி மோகன்.
‘சான்ஸே இல்லை, ஐ ஆம் ஒன்லி ஃபார் ஜெண்ட்ஸ்!’