கமல் பிறந்த நாளையொட்டி மூன்று நாட்கள் பிரமாண்டமாக நிகழ்ச்சிகள் நடந்தன. அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த அன்று, இந்தியாவின் ஆகச் சிறந்த நடிகரான கமலிடம் அவருக்குப் பிடித்த நடிகர் யார் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு மனம் திறந்து பதில் சொன்னார் உலக நாயகன்.
'தமிழில் ஒருவர் அல்ல, பலருக்குத் நல்ல திறமை இருக்கிறது. ஆனால் சற்று பரந்துபட்டு சிந்தித்தால், மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஃபஹத் பாசில், பாலிவுட்டில் நவாசுதீன் சித்திக் மற்றும் ஷஷாங் அரோரா ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள்’ என்றார் கமல்.
கமல் இயக்கி நடித்த ‘ஹே ராம்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நவாசுதீன். ஆனால் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகள் வெட்டப்பட்டதால், அச்சமயத்தில் நவாசுதீன் வருந்தினார் என்று கமல் கூறினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து தமிழுக்கு அறிமுகமானார் நவாசுதீன் சித்திக்.
ஷஷாங் அரோரா இளம் வயதிலேயே பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும் தனது ஆதர்ச நடிகரான நாகேஷை ஏதோ ஒரு வகையில் ஷஷாங் நினைவுபடுத்துகிறார் என்றார் கமல்.