பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோன் பனேகா க்ரோர்பதியின் சிறப்பு நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) ஒளிபரப்பாகவுள்ளது. இதில், சமூகவியலாளர் பிந்தேஷ்வர் பதக்கிடம் அமிதாப் பச்சனிடம் தன்னைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"எனது குடும்பப் பெயரான பச்சன் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது. எனது தந்தையும் அதற்கு எதிரானவர். எனது குடும்பப் பெயர் ஸ்ரீவஸ்தவா. ஆனால், அதை நாங்கள் ஒருபோதும் நம்பியதில்லை. எனவே, இந்த குடும்பப் பெயரை நான் முதன்முதலாக வைத்துக்கொண்டதற்கு பெருமை கொள்கிறேன். என்னைப் பள்ளியில் சேர்க்கும்போது எனது தந்தையிடம் குடும்பப் பெயர் பற்றி கேட்டனர். அப்போது, பச்சன்தான் குடும்பப் பெயர் என அவர் முடிவு செய்தார். மக்கள் கணக்கெடுப்பு நடத்தும் ஊழியர்கள் வரும்போது, எனது மதம் குறித்து கேள்வி எழுப்புவார்கள். அவர்களிடம் எப்போதுமே நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல, நான் இந்தியன் என்றுதான் கூறுவேன்.
தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மரியாதை அளிப்பதில் எனது தந்தைக்கு எந்த வெட்கமும் கிடையாது. ஹோலி பண்டிகையின்போது, தங்களைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மரியாதைக்குரிய நபர்கள் கால்களில் வண்ணப் பொடியை தூவுவது எங்களது பாரம்பரியமாகும். எனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன், இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு கழிப்பறைகளைச் சுத்தம் செய்தவர்களின் கால்களில் வண்ணப் பொடியை தூவுவார்" என்றார்.