இயக்குநர் ராஜசேகர் காலமானார்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் (59) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
பாரதிராஜாவின் "நிழல்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான "இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டிய இவர், இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து "பாலைவன ரோஜாக்கள்', "சின்னப் பூவே மெல்லப் பேசு' , "பறவைகள் பலவிதம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
ராபர்ட் - ராஜசேகர் என இருவரும் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இவர்கள் இடம் பிடித்தனர்.
பின்னர் சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடித்து வந்தார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ராஜசேகருக்கு மனைவி நூரிவி உள்ளார்.
பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின் ராஜசேகரின் உடல் கே. கே. நகரில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம்
செய்யப்பட்டது.