'பிக் பாஸ்' கவின் பெண்களின் மனங்களைக் கவர்ந்தது எப்படி?

முதல் சீசனில் ஓவியா போல, இந்த சீசனில் கவின்; ஓவியாவுக்கு ஆண் ரசிகர்கள் எப்படி அதிகமோ, அபபடிதான் இந்த சீசனில் கவினுக்கு பெண் ரசிகைகள் அதிகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 
'பிக் பாஸ்' கவின் பெண்களின் மனங்களைக் கவர்ந்தது எப்படி?

கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குள்  கையெழுத்து போட்டவன்
பத்து பேர்கள் மத்தியில்  பளிச்சென்று உள்ளவன்
அழுக்குச் சட்டை போட்டாலும்  அழகாய் தோன்றும் ஆணழகன்
பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ
கண்ணே இல்லா கன்னியரும் கடிதம் எழுத செய்கிறவன்
காதல் மறுத்த பெண் மனத்தில் கல்லை எறிந்து போகிறவன் எவனோ....

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கவின் வெளியேறுவாரா மாட்டாரா என்று தான் கடந்த இரண்டு நாட்களாக விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. 'கவின் இல்லையென்றால் பிக் பாஸ் இல்லை' என்று அவரது ரசிகர்கள், முக்கியமாக ரசிகைகள் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் கவினுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு அளிக்கிறார்கள் ரசிகர்கள்? என்ற கேள்விக்கு இன்றும் பலருக்கு விடை தெரியவில்லை...

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி 90 நாட்களைக் கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் தற்போது முகேன், தர்ஷன், கவின், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் என 6 பேர் பிக் பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர்.

இதில் கடந்த வாரம் நடைபெற்ற 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்கில் முகேன் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்னும் சில நாட்களில் முடியவுள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமான, அதிர்ச்சிகரமான பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த போட்டியாளர்களில் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொண்டது 'சரவணன் மீனாட்சி' புகழ் 'கவின்' தான். தொடர்ந்து அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று பலரும் குழப்பத்தில்தான் இருக்கின்றனர். 

நேற்று வெளியான ப்ரோமோவில், பிக் பாஸ் அறிவிப்பை அடுத்து, ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியேற முற்படுகிறார் கவின். ஒரு சில மணி நேரத்தில் இந்த ப்ரோமோ வைரலாக பரவியது. மேலும், கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

நேற்றைய நிகழ்ச்சியிலும் கவின் ரூ. 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு செல்வது போன்ற ட்விஸ்டுடன் நிகழ்ச்சியை முடித்துவிட்டனர். கவின் இடம்பெற்ற இந்த ப்ரோமோ வெளியானதுமே, அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில்    #NoKavinMeansNoBiggboss ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகின. 'கவின் இல்லையேல் பிக் பாஸ் இல்லை; கவின் இல்லையென்றால் பிக் பாஸ் பார்ப்பதை புறக்கணிப்போம்' என்றெல்லாம் பதிவுகள் வந்தன. 

கவின் பெயர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருப்பது புதிதல்ல. இதற்கு முன்னதாகவும் பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் கவினை டார்கெட் செய்யும் பல்வேறு சம்பவங்களின் போது, கவினுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின.  இதுவரை அதிக முறை நாமினேட் செய்யப்பட்டவர், நாமினேஷனில் அதிக ஓட்டுகள் வாங்கியவர், அதிகமாக எதிர்மறையான விமர்சனங்களை கடந்தவர், லாஸ்லியா, சாண்டி தவிர மற்ற போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்படுவர், அதிகமான ப்ரோமோக்களில் இடம்பெற்றவர் என்ற 'இந்த' பெருமைகள் கவினையேச் சாரும். 

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் தொடர்பான ஹேஷ்டேக்குகள் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளன( மதுமிதா தற்கொலை முயற்சி தவிர).  கவினை அவரது நண்பர் பிரதீப், கன்னத்தில் அறைந்த ப்ரோமோ வீடியோ தான் பிக் பாஸ் ப்ரோமோக்களில் அதிகம் பார்வையாளர்களைக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கவின் குடும்பம் ஒரு பண மோசடி வழக்கில் சிக்கி அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் மூவர் சிறை சென்றுள்ளனர். இந்த சம்பவத்தின் போதும் கவினுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போது கவின்- சாண்டி காம்பினேஷன் செம ஹிட்டானது. இடையே, விளையாட்டாக கவின் நான்கு பெண்களுக்கு ரூட் விட அது விபரீதமானது. முதலில் அபிராமிக்கு கவின் மீது ஏற்கனவே கிரஷ் இருந்ததாகக் கூறுகிறார். சில காரணத்திற்காக அவர் விலகவே, கவின்- சாக்ஷி இடையே பழக்கம் ஏற்பட்டது. இதில், கவின் தப்பித்துக்கொள்ள சாக்ஷி அவப்பெயரோடு தான் வெளியே சென்றார். (கவின் - சாக்ஷி நட்பு/ காதலுக்கு 'நோ கமெண்ட்ஸ்')

கவின் - சாக்ஷி இடையே பல சம்பவங்களில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பழிபோட்டுக்கொண்டனர். இருந்தபோதிலும் வெளியே சாக்ஷிக்கு ஆதரவு பலமாக இருந்ததை மறுக்க முடியாது. 

இதற்கு முக்கியக் காரணம், 'கண்டெண்ட்டுக்காக தான் சாக்ஷியுடன் பழகினேன்' என்று கவின், கமலிடம் கூறியது பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. என்னதான் கவின் பலமுறை இதற்கு வருத்தம் தெரிவித்தாலும், 90 நாட்களாகியும் இந்த வடு அவரை விட்டு போகவே இல்லை.

பின்னர் லாஸ்லியாவுடன் பழகிய கவினுக்கு அதுவே பிடித்துப்போக அவருடனான பழக்கத்தை தொடர்கிறார். ஒருகட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கு கவின்- லாஸ்லியா சீன்கள் சலித்து தான் போய்விட்டது. 'வெளியில போய் பாத்துக்கலாம்' கவின்- லாஸ்லியாவின் நட்பு மற்றும் காதல் குறித்து சேரன், சாண்டி என பலர் கூறிவந்தாலும் கவின் - லாஸ் அதனை விடுவதாகத் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் லாஸ்லியா விவகாரத்தில் சேரன் மீது கவினுக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டது. சேரன் மிகப்பெரிய இயக்குனர் என்று மற்றவர்கள் மரியாதை கொடுக்க, கவின் அதை 'அசால்ட்' ஆகவே எடுத்துக்கொண்டார். லாஸ்லியா மீது சேரன் வைத்திருக்கும் அன்பு பொய்யானது என்று லாஸிடம் அடிக்கடி கூறி வந்தார். இது பல சமயங்களில் உண்மை என்றும் தெரிந்தது( பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களிடம் லாஸ்லியாவை விட்டுக்கொடுப்பது, சேரன் மற்றும் அவரது மகளின் உரையாடல் உள்ளிட்ட காட்சிகள்) சேரனுக்கும் பல இடங்களில் கவினை பிடிக்கவில்லை, ஆனால், லாஸ்லியாவுக்கு பல இடங்களில் ஆதரவு கொடுத்திருக்கிறார். 

சேரன், ரகசிய அரசியலை இருந்தபோது கவின் - லாஸ் பேசும் ஒரு காட்சியை பார்த்துவிட்டு, கவினை ஏன் இன்னும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்; அவரை வெளியேற்றுவது தான் சரியாக இருக்கும்' என்று மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். ஒவ்வொரு எலிமினேஷன் நிகழ்வின் போதும் கவின் காப்பாற்றப்பட்டு மற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படும் போது, 'மக்களை புரிஞ்சுக்கவே முடியல' என்று வனிதாவும் இதை பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், அதிக ஓட்டுகள் பெற்று கவின் காப்பாற்றப்படுவது வழக்கமாகி விட்டது. 

பிக் பாஸ் போட்டியாளர்களும் சரி, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த கஸ்தூரி, வனிதாவும் சரி, பல பெண்களுடன் பழகி ஏமாற்றியதாக கவினை தான் கடுமையான வார்த்தைகளால் டார்கெட் செய்தனர். ஏன் வார இறுதி ஆனால், கமல் சாருக்கு  கூட டார்கெட் கவின் மற்றும் லாஸ்லியாதான் எனுமளவுக்கு ஆனது. (இதனாலே கவின் மற்றும் லாஸ்லியா ஆர்மி கமல் மீது செம்ம காண்டில் இருப்பதாகத் தகவல்)

கவின் லாஸ்லியா, சாண்டி, முகேன், தர்ஷன் என ஐவர் கூட்டணி உருவான போது பார்வையாளர்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டது. இருந்த போதிலும் கவின்- லாஸ்லியா இடம்பெறும் காட்சிகளே அதிகமாக காட்டப்பட்டு, வார இறுதியில் அவர்களை பற்றிய விவாதமே அதிகமாக இருந்தது. கவின் மற்றும் லாஸ்லியாவை வைத்துதான் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது என்றும் சிலர் பேசினர். 

சரி, கவினுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு என்று கேட்டால் சில விஷயங்களை ஊகிக்கலாம். 'சில பேர் பேசியே காரியத்தை சாதிப்பாங்க' ன்னு சொல்வாங்க. அந்த வகையில கவின் சில இடங்களில் மட்டும் பேசியும், பல இடங்களில் பேசாமலும் சாதித்தார் என்று சொல்லலாம். பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களுக்கு நியாயமாக குரல் கொடுப்பதில் இருந்து லாஸ்லியா தப்பே செய்தாலும் அவருக்கு ஆதரவாக நிற்பது வரை கூறலாம். 

முக்கியமாக, தேவையான இடங்களில் மட்டும் கருத்தை எடுத்து வைப்பது, மற்றவர்கள் கோபப்பட்டாலும் நிதானம் இழக்காமல் கோபப்படாமல் பொறுமை காப்பது, பல இடங்களில் ' என்ன மனுஷன் யா இவன்' என்று பார்வையாளர்கள் கூறும் அளவுக்கு 'அப்லாசை' அள்ளியிருக்கிறார் கவின். அந்த அளவுக்கு நிதானத்துடன் இருக்கிறார். தன் மீது தவறுகள் இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் அந்த தவறை மறைக்கும்படி ஏதேனும் செய்து விடுகிறார்.

தப்பை ஒத்துக்கொண்டு சாரி கேட்கிறார், விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்கிறார், 'நண்பர்கள் ஜெயிச்சா போதும், நான் தோத்தாலும் பரவாயில்ல' ன்னு சொல்றது.. இதையெல்லாம் வைத்து தான் இவ்வளவு நாட்கள் ஓட்டியிருக்கிறார். 

ஒவ்வொரு வாரமும் கமல், கவினை கேள்வி கேட்கிறார்; ஆனால், தன் மீதான விமர்சனங்களை கண்டு பயப்படுவதில்லை. கடைசியாக சேரன் வெளியே சென்ற போது, 'அனைத்து விமர்சனங்களையும் தாண்டி மக்களுக்கு ஏதோ உன்னிடம் பிடித்திருக்கிறது. அது உன்னுடைய நேர்மையாக இருக்கலாம்; தவறை ஒப்புக்கொள்ளும் உன்னுடைய கேரக்டராக இருக்கலாம்' என்று கவினிடம் கூறியது 100க்கு 100 உண்மை தான் என்கின்றனர் ரசிகர்கள்.

யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ இளைய தலைமுறையினருக்கு முக்கியமாக கவினை பிடித்திருக்கிறது. கவின் மிகவும் இயல்பாக இருப்பதாக கமெண்ட் இடுகின்றனர் முக்கியமாக பெண் ரசிகைகள். 'நண்பர்கள்' என்ற ஒற்றை வார்த்தையை வைத்து ஆண் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். 'நண்பனுக்காக விட்டுக்கொடுக்கிறேன்' என்று கவின் சீன் எல்லாம் போடவில்லை; வீட்டில் உள்ளவர்கள் தான் அதைக் கூறிக்கொண்டே இருந்தார்கள். 'எனக்கு தோணுறத தான் நான் செய்ய முடியும்' என்று கவின் கூறியதெல்லாம் இயல்பாகவே இருந்தது. 

லாஸ்லியாவின் குடும்பத்தினரை கவின் எதிர்கொண்ட விதம் படத்தில் காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி இருக்கும்? அப்படி தான் இருந்தது. கவின் மனமுடைந்து அழுதது; லாஸ்லியாவின் அப்பா கவினிடம் பேசியது என உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளும் நடந்தன. இதைத்தொடர்ந்து கவினின் நண்பர் பிரதீப் வீட்டிற்குள் வந்து கவினை ஒரு 'அறை' விட்டுச் சென்றது நண்பனுக்கு அவர் அளிக்கும் உரிமை என்று பாராட்டைத் தான் பெற்றது. 

பிக் பாஸ் வீட்டில் கவின் மீது வைக்கும் ஒவ்வொரு விமர்சனங்களையும் கவின் ரசிகர்கள் 'பாசிட்டிவ்' ஆக தான் பார்ப்பதாகத் தெரிகிறது. சுயநலமில்லாமல் நேர்மையாக இருக்கும் போட்டியாளர் என்று கவினை சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள். 

முதல் சீசனில் ஓவியா போல, இந்த சீசனில் கவின்; ஓவியாவுக்கு ஆண் ரசிகர்கள் எப்படி அதிகமோ, அப்படிதான் இந்த சீசனில் கவினுக்கு ரசிகைகள் அதிகம்.  பெண்களிலேயே சிலருக்கு கவின் என்றாலே வேப்பங்காயாக இருக்கலாம். ஆனால், இன்றைய இளம் தலைமுறையின் பிரதிபலிப்பு கவின் தான். அதனால் தான் கவினை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்..

தோற்றாலும் பெண்களின் மனங்களை வென்றவர் அவர் மட்டும் தான்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com