ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வேலையின்றி அவதிப்படும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஒரு மாத மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் விஷால்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 9,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வேலையின்றி அவதிப்படும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் 1500 பேருக்கு ஒரு மாத மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார் நடிகர் விஷால். இதுதவிர 300 திருநங்கைகளுக்கும் ஒரு மாத மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார். மேலும் வெளியூர்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் இதுபோன்று உதவிகள் செய்ய முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.