

தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாகச் சமூகவலைத்தளங்களில் சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றை தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பியது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் விடியோவின் சில பகுதிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஜோதிகாவுக்கு எதிராகச் சமூகவலைத்தளங்களில் பலரும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.
அந்த விழாவில் ஜோதிகா பேசியதாவது:
பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. அதைப் பார்க்காமல் போகாதீர்கள், அந்தக் கோயிலைக் கண்டிப்பாகப் பார்க்கணும், அவ்வளவு அழகாக உள்ளதாகச் சொன்னார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன். அவ்வளவு அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்குப் பராமரித்து வருகிறார்கள். அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் இருந்தது. அது சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது.
எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, ராட்சசி படத்தில் கூட இதைச் சொல்லியுள்ளேன். இயக்குநர் கெளதம் (ராஜ்) சொல்லியுள்ளார். கோயிலுக்காக அவ்வளவு காசு கொடுக்கிறீர்கள், அவ்வளவு செலவு செய்கிறீர்கள், பெயிண்ட் அடிக்கிறீர்கள், பராமரிக்கிறீர்கள். கோயில் உண்டியலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள். தயவுசெய்து அதே காசைக் கட்டடத்துக்குக் கொடுங்கள், பள்ளிகளுக்குக் கொடுங்கள், மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள் (ஜோதிகா இதைப் பேசிக்கொண்டிருக்கும்போது விழா அரங்கில் பிரபலங்களும் ரசிகர்களும் கைத்தட்டுகிறார்கள்). இது மிகவும் முக்கியம். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்தக் கோயிலுக்கு நான் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு கோயிலுக்குப் போகவில்லை. மருத்துமனைகளும் அந்தளவுக்கு முக்கியம், பள்ளிகளும் அந்தளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.