பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளார்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நேற்று மாலை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது.
இதனால் உலகமெங்கிலும் உள்ள எஸ்.பி.பி. ரசிகர்கள் கவலையடைந்தார்கள். சமூகவலைத்தளங்களில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினார்கள். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்பட திரையுலகப் பிரபலங்களும் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தங்கள் வேதனையை விடியோவாகவும் ட்வீட்டாகவும் வெளியிட்டார்கள்.
இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரோனா காரணமாக எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி.க்கு தீவிர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. அவருடைய உடல்நிலை குறித்து, மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனை இன்று தெரிவித்துள்ள தகவலால் எஸ்.பி.பி. ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளார்கள். இதேபோல எஸ்.பி.பி.யின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு, அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து எஸ்.பி.பி. ரசிகர்களின் வேண்டுதலாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.