உங்களை அவர் சந்தித்திருக்கக் கூடாது: நடிகை ரியா மீது சுசாந்த் சிங்கின் சகோதரி சாடல்

உங்களை அவர் சந்தித்திருக்கக் கூடாது: நடிகை ரியா மீது சுசாந்த் சிங்கின் சகோதரி சாடல்

நீங்கள் செய்ததையெல்லாம் கடவுள் பார்க்காமல் இருந்திருப்பார் என நினைக்கிறீர்களா...

நடிகை ரியாவை என் சகோதரர் சந்தித்திருக்கக் கூடாது என சுசாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கூறியுள்ளார். 

நடிகா் சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். இந்த வழக்கை துணைக் காவல் ஆணையா் தலைமையிலான மும்பை காவல்துறை குழு விசாரணை நடத்தி வந்தது.

சுசாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடை தந்தை சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக அவருடைய காதலியும் நடிகையுமான ரியா மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது புகாா் தெரிவித்த சுசாந்த் சிங்கின் தந்தை இந்திரஜித், சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி பணத்தை ரியா குடும்பத்தினா் தவறாக கையாண்டதாகவும் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. 

சுசாந்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையைத் தொடங்கியுள்ளது. மும்பை காவல்துறையிடமிருந்த பெறப்பட்ட அறிக்கை மற்றும் வழக்கு தொடா்பான ஆவணங்களின் அடிப்படையில் அந்தக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங், ரியாவின் சமீபத்திய பேட்டிக்குக் கண்டனம் தெரிவித்து பல ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

என் சகோதரர் அந்தப் பெண்ணைச் சந்தித்திருக்கவே கூடாது. ஒருவருடைய அனுமதியில்லாமல் அவருக்குப் போதைப் பொருளைக் கொடுத்து பின்பு உனக்கு மனநிலை சரியில்லை என்று அவரிடம் கூறி பிறகு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதெல்லாம் என்ன மாதிரியான நடிப்பு மற்றும் சூழ்ச்சி?

சுசாந்துக்கு அவருடைய குடும்பத்தினர் ஆதரவளிக்கவில்லை என அவர் கூறுகிறார். உடல்நலக் குறைவுடன் உள்ள சுசாந்த் சிங், சண்டிகர் வருகிறார் என்று தெரிந்தவுடன் அமெரிக்காவிலிருந்து நான் புறப்பட்டு வந்தேன். என் குழந்தைகளையும் வியாபாரத்தையும் விட்டுவிட்டு வர நேர்ந்தது. இருந்தும் என்னால் சுசாந்தைப் பார்க்க முடியவில்லை. ரியா தொடர்ந்து அழைத்ததாலும் படப்பிடிப்புப் பணிகளாலும் உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். சுசாந்தின் குடும்பத்தினர் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார்கள். 

என் சகோதரரின் மறைவுக்குப் பிறகு தேசியத் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்து அவருடைய புகழைக் கெடுக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் செய்ததையெல்லாம் கடவுள் பார்க்காமல் இருந்திருப்பார் என நினைக்கிறீர்களா? கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

ஸ்வேதாவுடன் சுசாந்த் சிங்
ஸ்வேதாவுடன் சுசாந்த் சிங்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com