நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: ஆகஸ்ட் 5-ல் இறுதி விசாரணை

வாக்குப் பெட்டிகளை திறந்து வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: ஆகஸ்ட் 5-ல் இறுதி விசாரணை

சென்னை, ஜூலை 20: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத்துறை ஐஜி கீதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர். மேலும் தமிழக அரசின் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் நடிகர் சங்கத்துக்கான புதிய வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அதுவரை நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி கீதா தொடர்ந்து பணிகளை கவனிக்கலாம் எனவும், அவரது நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். 

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது விஷால் தரப்பில் வாக்குப் பெட்டிகளை திறந்து வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com