தான் யாரையும் காதலிக்கவில்லை என நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா கூறியுள்ளார்.
பேட்ட படத்தில் நடித்த நவாசுதீன் சித்திக்கிடம் அவருடைய மனைவி ஆலியா, விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நவாசுதீனும் ஆலியாவும் 2009-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளார்கள். 46 வயது நவாசுதீன், 1999 முதல் படங்களில் நடித்து வருகிறார். தி லஞ்ச் பாக்ஸ், மேண்டோ, ராமன் ராகவ் 2.0 போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகப் பாராட்டப்பட்டவர். 2012-ல் நான்கு படங்களில் சிறப்பாக நடித்ததற்காக சிறப்பு தேசிய விருதைப் பெற்றார். சர்வதேசப் படவிழாக்களிலும் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.
விவாகரத்துக்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் ஆலியா கூறியதாவது: 10 வருடங்களுக்கு முன்பு, திருமணமானவுடனே எங்கள் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஊரடங்கு உத்தரவினால் கடந்த இரு மாதங்களாக யோசிக்க நிறைய நேரம் கிடைத்தது. திருமண வாழ்க்கையில் சுய மரியாதை என்பது முக்கியம். தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். அவருடைய சகோதரர் ஷமாஸும் பிரச்னைக்கு ஒரு காரணம். அஞ்சனா என்கிற என்னுடைய நிஜ பெயருக்குத் தற்போது மாறிவிட்டேன். எதிர்காலத்தைப் பற்றி எண்ணவில்லை. ஆனால், எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம். இரு குழந்தைகளையும் இதுவரை நான் தான் வளர்த்துள்ளேன். இனிமேலும் நான் தான் வளர்ப்பேன் என்றார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, மே 7 அன்று ஆலியாவின் வழக்கறிஞர், நவாசுதீனுக்கு வாட்சப் வழியாக விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும் இதற்கு இதுவரை நவாசுதீன் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் ஆலியாவுக்கு நவாசுதீனிடம் பணியாற்றிய பீயுஷ் பாண்டே என்கிறவருடன் காதல் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரு நிகழ்ச்சியில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து இச்செய்தி வெளியாகியுள்ளது. மூன்று பேர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இவ்விருவர் மட்டும் இருப்பது போல புகைப்படம் வெட்டப்பட்டுள்ளது. இந்தச் செய்திக்கு பீயூஷ் பாண்டே ஒரு பேட்டியில் மறுத்துள்ளார்.
இதுபோன்ற வதந்திகளுக்குப் பதில் அளிப்பதற்காக ட்விட்டரில் அறிமுகமாகியுள்ளார் ஆலியா. எனக்கு யாருடனும் எந்த உறவும் கிடையாது. இதுகுறித்த அனைத்து செய்திகளும் பொய்யானவை. மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக என் பெயரைக் கெடுக்கவேண்டாம். பணத்தால் உண்மையை விலைக்கு வாங்க முடியாது என்று கூறியுள்ளார்.