
பாட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு மோதிரம் மாற்றி தங்களின் திருமண நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
2011 டிசம்பரில் நடிகர் கே. நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்துத் திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால். 2017-ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 2018 நவம்பரில் மனைவி ரஜினியை விவாகரத்து செய்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்தார்.
ஜுவாலா கட்டா, பாட்மிண்டன் வீரர் சேதன் ஆனந்தைத் திருமணம் செய்து, 2011-ல் விவாகரத்து செய்தார்.
கடந்த வருட ஜூன் மாதம், ஜூவாலா கட்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார் விஷ்ணு விஷால். இதனால் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. பிறகு, புத்தாண்டையொட்டி விஷ்ணு விஷாலும் ஜூவாலா கட்டாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டன. இதன்மூலம் இவ்விருவரும் தங்கள் காதலை வெளியுலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் மற்றொரு புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார்கள். கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது விஷ்ணு விஷாலை நினைத்து உருக்கமாக இன்ஸ்டகிராமில் பதிவு எழுதினார் ஜூவாலா கட்டா.
கடந்த ஏப்ரல் மாதம் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் விஷ்ணு விஷால் கூறியதாவது: மனைவியை விட்டுப் பிரிந்த பிறகு ஜூவாலா கட்டாவைச் சந்தித்தேன். அவருடைய நிறைய நேரம் செலவழிக்க ஆரம்பித்தேன். நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் என்பதால் அவரை எனக்குப் பிடிக்கும். அவரும் தன் மண வாழ்க்கையில் பிரிவைச் சந்தித்துள்ளார். நாங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசியுள்ளோம். இந்த உறவு நல்லமுறையில் சென்றுகொண்டிருக்கிறது. வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்றார்.
இந்நிலையில் இன்று தனது 37-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஜூவாலா கட்டா. இதனால் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயமானதை உறுதி செய்துள்ளார்கள். ஜூவாலாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்து இத்தகவலை அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.