நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு குறித்து ரோபோ சங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 42.
கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளார்கள்.
வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
வடிவேல் பாலாஜியின் மரணம் அதிர்ச்சியாக உள்ளது. என்னுடன் 19 வருடங்களாக மேடைகளில் பயணித்த கலைஞன். சின்னத்திரையில் முக்கியமான கலைஞன். நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் மேடையில் ஒரே ஆளாக நகைச்சுவை செய்து மக்களைக் கட்டிப் போட்டுச் சிரிக்க வைப்பார்.
10 நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் விரைவில் மீண்டு வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார். அடுத்த 10 நாள்களில் இப்படியொரு செய்தி வந்திருப்பதை என்னால் தாங்கவே முடியவில்லை. அவருக்கு அழகான குழந்தைகள் உண்டு. கடந்த 10 நாள்களாகப் போராடினார். நல்ல கலைஞனுக்குக் கூட இப்படியொரு கொடூரமான சாவா என்று கடவுளிடம் கேட்கிறேன் எனக் கூறியுள்ளார்.