தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் அத்ராங்கி ரே படத்தை இயக்கி வருகிறார் ஆனந்த் எல். ராய். 2013-ல் தனுஷ் நடித்த ரான்ஜானா என்கிற ஹிந்திப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கினார். அவருடன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, தில்லி, ஆக்ரா, போன்ற நகரங்களில் நடைபெற்றது. தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்நிலையில் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் ஆனந்த் எல். ராய் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
எனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. நலமாகவே உள்ளேன். தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அரசின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அத்ராங்கி ரே படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் பரிசோதனை செய்துகொண்ட நடிகர் தனுஷ், தனக்கு கரோனா இல்லை என்பது உறுதியான பிறகே குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். ஆனந்த் எல். ராய்க்கு கரோனா என்பதால் அத்ராங்கி ரே படக்குழுவினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.