பாலிவுட்டில் என்னுடைய வாய்ப்புகளைத் தடுக்க ஒரு கூட்டம் செயல்படுகிறது: ஏ.ஆர். ரஹ்மான் பகீர் குற்றச்சாட்டு

பாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகளை ஒரு கூட்டம் தடுத்து வருவதாகப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். 
பாலிவுட்டில் என்னுடைய வாய்ப்புகளைத் தடுக்க ஒரு கூட்டம் செயல்படுகிறது: ஏ.ஆர். ரஹ்மான் பகீர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

பாலிவுட்டில் தனக்கான வாய்ப்புகளை ஒரு கூட்டம் தடுத்து வருவதாகப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். 

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

தில் பேச்சாரா படம், ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று நேரடியாக வெளியாகியுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படத்தை அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது:

நல்ல படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என நான் சொல்வதில்லை. தவறான புரிதால் ஒரு கூட்டம் எனக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகிறது.

தில் பேச்சாரா இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தபோது இரு நாள்களில் அவருக்கு நான்கு பாடல்களைத் தந்தேன். உங்களிடம் செல்லக்கூடாது என எத்தனை பேர் சொன்னார்கள் தெரியுமா?! உங்களைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்கள் என்று என்னிடம் அவர் சொன்னார். அதைக் கேட்ட பிறகுதான் எனக்குப் புரிந்தது - நான் எதனால் பாலிவுட்டில் குறைவான படங்களுக்கு இசையமைக்கிறேன், எதனால் நல்ல படங்கள் எனக்கு வருவதில்லை என்று. கெடுதல் செய்வது தெரியாமல் எனக்கு எதிராக ஒரு கூட்டம் வேலை செய்கிறது. 

நான் சிலவற்றைச் செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மற்றொரு கூட்டம் அது நடப்பதைத் தடுக்கிறது. பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. எல்லாமே கடவுள் மூலமாக வருவதாக நம்புகிறேன். எனக்கான படங்களை எடுத்துக்கொண்டு கூடவே மற்ற வேலைகளையும் செய்கிறேன். அனைவரையும் நான் வரவேற்கிறேன். அழகான படங்களை உருவாக்குங்கள், என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறியுள்ளார். 

சுசாந்த் சிங் தற்கொலையால் பாலிவுட்டில் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், வாய்ப்புகள் குறித்த விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஹ்மானின் இந்தக் குற்றசாட்டு பாலிவுட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com