

கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
கரோனா பாதிப்பால் அவதிப்படும் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது சம்பளத்தைத் தானாகக் குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா பெருந்தொற்று தென்னிந்தியத் திரையுலகத்தையும் பெரிதாகப் பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒப்புக்கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், அவர் நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடையவுள்ளார்கள்.
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு:
விஜய் ஆண்டனி தற்போது பெப்சி சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரீயேஷன்ஸ் T. சிவா தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.
எல்லாமே திட்டப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில், கரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாகப் புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்தப் பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி விட்டார். இந்தச் சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டைக் குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் டி. சிவா மனமுவந்து பாராட்டி, இவ்வாறு கூறினார்:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்காக ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும் ஒரு நடவடிக்கை. அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். அப்படி செய்தால் தான், தற்போது வெளியாகக் காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதிச் சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதார பாராட்டுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.