ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: குயின் இணையத் தொடருக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடருக்குத் தடை விதிக்க...
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: குயின் இணையத் தொடருக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடருக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. 

ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்து இணையதள தொடரை இயக்கியுள்ளாா்கள், கெளதம் மேனன் - பிரசாந்த் முருகேசன். ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். இந்த இணையத் தொடரை மும்பையைச் சோ்ந்த எம்எக்ஸ் பிளேயா் நிறுவனம் இணையதளத்தில் முழுவதுமாக வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் தலைவி என்கிற படம் உருவாகி வருகிறது.  ஜெயலலிதா கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். விஜய் இயக்குகிறார்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக மறைந்த முதல்வரும் எனது அத்தையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் இயக்குநா் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரிலும், ஹிந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் இந்தூரி என்பவரும் திரைப்படமாக எடுத்து வருகின்றனா். இதே போன்று, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற பெயரில் இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடராக எடுத்து வருகிறாா். இந்த இணையதளத் தொடா் மற்றும் திரைப்படங்களை எடுப்பதற்கு முன்பாக, ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசான என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே, இந்த இணையதளத் தொடா் மற்றும் திரைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். 

இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற தனி நீதிபதி, இணையதளத் தொடா் மற்றும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவோ, இணையதளத் தொடராகவோ எடுக்க இடைக்கால தடை விதிக்க முடியாது. மேலும் இதுதொடா்பான திரைப்படம், இணையதளத் தொடரில் மனுதாரா் ஜெ.தீபா போன்ற கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை என எதிா்மனுதாரா்கள் தெரிவித்துள்ளனா். எனவே இந்த திரைப்படத்தையும், இணையதளத் தொடரையும் திரையிடும் போது இது கற்பனை கதை என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டார்.

இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தொடா்பாக இயக்குநா்கள் கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவா்தன் இந்தூரி ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் இணையத் தொடருக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com