சீர்காழி, பிப். 4: சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதினத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். சுவாமி, அம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சன்னதிகளில் பிக்பாஸ் புகழ் மற்றும் பின்னணிப் பாடகர் வேல்முருகன் அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் என் முகம் தற்போது அனைத்து பகுதிகளிலும் நன்குப் பரிச்சயம் ஆகியுள்ளது. கலைமாமணி விருது, டாக்டரேட் பட்டம், 300க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்கள் கொடுத்துள்ள நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் சென்றீர்கள் எனச் சிலர் கேட்கின்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் நிச்சயம் எனது அடுத்தக்கட்ட இலக்கை முன்னெடுத்து செல்ல முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தற்போது 4 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். 2 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். இதேபோல் மற்ற போட்டியாளர்களுக்கும் அடுத்தக்கட்ட பயணம் தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் எல்லாம் ஸ்கிரிப்ட் எனப் பலர் கூறுவது முற்றிலும் பொய். அங்குள்ள 100 நாள்களிலும் வெளியுலகத் தொடர்பு, செல்போன், நாளிதழ்கள் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு ஒரு சிரமமான, மன உளைச்சலான சூழலில்தான் இருக்க நேரிடும்.
கடந்த முறை வைத்தீஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபோது தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. அதன்பின்னர் சுவாமி தரிசனம் செய்தபோது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு வைத்தீஸ்வரன் கோயில் எப்போதும் என் வாழ்வில் திருப்பத்தைத் தந்து வருகிறது என்று கூறினார். அப்போது அவருடன் கீழசாலை ஸ்ரீராம் உடனிருந்தார்.