ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2 படத்தைத் திரையரங்கில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கேரள ஃபிலிம் சேம்பர் தெரிவித்துள்ளது.
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான படம் த்ரிஷ்யம்.
கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது.
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 உருவாகியுள்ளது. ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படம், பிப்ரவரி 19 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஓடிடி வெளியீட்டுடன் திரையரங்கிலும் த்ரிஷ்யம் 2 படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ரசிகர் ஒருவர் அளித்த கேள்விக்கு, த்ரிஷ்யம் 2 படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு திரையரங்குகளிலும் வெளியாக வாய்ப்புள்ளதாக நடிகர் மோகன் லால் கூறியுள்ளார். ஆனால் த்ரிஷ்யம் 2 படத்தைத் திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கேரள ஃபிலிம் சேம்பரின் தலைவர் விஜயகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் எந்தப் படத்தையும் திரையரங்கில் வெளியிட கேரள ஃபிலிம் சேம்பர் அனுமதிக்காது. இந்த விதிமுறை மோகன்லாலுக்காகவோ ஒரு புதுமுகத்துக்காகவோ மாற்றப்படாது என்றார்.