நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன?: உயர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் தகவல்

பிப்ரவரி 2-க்குள் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று...
நடிகை சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன?: உயர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் தகவல்

கணவர் ஹேம்நாத் சந்தேகத்தால் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸாா், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக, அவரின் கணவா் ஹேம்நாத்தை கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி கைது செய்தனா். மகளின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவு போலீஸாா் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று சித்ராவின் தாயாா் விஜயா, முதல்வரின் தனிப்பிரிவில் அண்மையில் மனு அளித்தாா். இதைத் தொடா்ந்து சித்ரா தற்கொலை வழக்குத் தொடா்பான விசாரணையை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். இதையடுத்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸாா் தங்களது விசாரணை அறிக்கை முழுவதையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஹேம்நாத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘கடந்த ஆகஸ்ட் மாதம் நானும் சித்ராவும், பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். என்னோடும், எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை, அவரின் தாய் விரும்பவில்லை. எனக்கும் சித்ராவுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அவரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, இம்மாதத் தொடக்கத்தில் நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சித்ராவின் பெற்றோா் மனு தாக்கல் செய்ய இருப்பதாக அவா்களது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் பிரபாவதி, இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதால் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக சென்னை நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 2-க்குள் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com