
சரவண பவன் உணவக உரிமையாளர் மறைந்த ராஜகோபாலுக்கு எதிரான ஜீவஜோதியின் 18 வருடப் போராட்டம் திரைப்படமாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவரின் கொலை வழக்கில் சரவண பவன் உணவக உரிமையாளர் மறைந்த ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2019 ஜூலை மாதம் ராஜகோபால் காலமானார்.
தண்டபாணியைத் திருமணம் செய்துள்ள ஜீவஜோதி, தஞ்சாவூரில் வசித்து வருகிறார். இவருக்கு பவின் என்கிற மகன் உள்ளார். தையல் மற்றும் உணவகம் ஆகிய தொழில்களில் ஜீவஜோதி ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜீவஜோதி, தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் ராஜகோபாலுக்கு எதிரான ஜீவஜோதியின் 18 வருடப் போராட்டம் திரைப்படமாகிறது. இதுகுறித்த அறிவிப்பை மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ஜங்லீ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. ஜீவஜோதி வேடத்தில் நடிக்கும் நடிகை உள்ளிட்ட படக்குழுவினரின் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இதுபற்றி ஜீவஜோதி கூறியதாவது:
உணவக உரிமையாளருக்கு எதிரான, 18 வருடங்களாக நடைபெற்ற என்னுடைய சட்டபூர்வமான, உணர்வுபூர்வமான போராட்டம் பற்றி படம் எடுக்க ஜங்லீ பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைத் திரையில் பார்க்கும்போது தற்போது நிலவும் ஆணாதிக்க முறையில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன் என்றார். ஜீவஜோதி படத்துக்கான திரைக்கதையை பவானி ஐயர் எழுதுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.