நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் - பிரேமம். இதில் மலர் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழடைந்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி.
மலர் கதாபாத்திரத்துக்கு முதலில் அசினை நடிக்க வைக்க எண்ணியதாக இயக்குநர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடனான உரையாடலில் அவர் கூறியதாவது:
முதலில் கதையை மலையாளத்தில் எழுதினேன். மலர் கதாபாத்திரத்தின் மலையாளப் பதிப்பில் அசினை நடிக்க வைக்க எண்ணினேன். ஃபோர்ட் கொச்சியிலிருந்து அக்கதாபாத்திரம் வருவது போல இருந்தது. என்னால் அசினைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிவின் பாலியும் முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அதையடுத்து அக்கதாபாத்திரத்தைத் தமிழில் எழுதினேன். கதை உருவாவதற்கான ஆரம்பக்கட்டம் அது. சிறுவயதில் ஊட்டியில் படித்தேன். சென்னையில் திரைப்படக் கல்வி படிப்பை முடித்தேன். அதனால் என்னிடம் தமிழுடனான வலுவான தொடர்பு உள்ளது என்றார்.